பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஒரு கடுமையான சவாலாக உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் போது ஆதரவளித்ததற்காக ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சனுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், பயங்கரவாதம் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிரான போராட்டத்தை இரு நாடுகளும் தொடரும் என்றும் அவர் கூறினார்.
கோதன்பர்க்கில் நடைபெற்ற தலைமைச் செயல் அதிகாரிகளின் வட்டமேசை மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தற்போதைய பதற்றமான சூழலில் ஸ்வீடன் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் கொண்டுள்ள சிறப்பு முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
"இன்றைய பதற்றமான உலகளாவிய சூழலில், இந்தியா மற்றும் ஸ்வீடன் போன்ற ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஒரு கடுமையான சவாலாக உள்ளது என்பதை இந்தியாவும் ஸ்வீடனும் ஒப்புக்கொள்கின்றன. கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஸ்வீடனிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த ஆதரவிற்காக பிரதமர் கிறிஸ்டர்சனுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பயங்கரவாதம் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடர்வோம்.
பாதுகாப்பு துறையில் நமது ஒத்துழைப்பு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. ஸ்வீடன் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி வசதிகளை நிறுவுவது, நாம் வெறும் வாங்குபவர்-விற்பவர் உறவை தாண்டி ஒரு நீண்டகால தொழில்துறை கூட்டாண்மையை நோக்கி நகர்கிறோம் என்பதற்கு ஒரு சான்றாக விளங்குகிறது," என்று பிரதமர் மோடி கூறினார்.
மேலும், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். அத்துடன், இந்த ஆண்டு ஜனவரியில் அவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட முந்தைய பயணம் குறித்தும் நினைவு கூர்ந்தார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை பிரதமர் மோடி பாராட்டினார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடனின் மதிப்புமிக்க "ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்" விருது வழங்கப்பட்டது. இது ஸ்வீடன் நாடு ஒரு வெளிநாட்டு அரசாங்க தலைவருக்கு வழங்கும் மிக உயர்ந்த கௌரவமாகும். பிரதமரின் ஸ்வீடன் பயணத்தின் போது வழங்கப்பட்ட இந்த சிறப்பு விருது, இந்தியப் பிரதமர் ஒரு வெளிநாட்டிலிருந்து பெறும் 31வது சர்வதேச கௌரவமாகும்.