உலகம்

மாலத்தீவு மிகவும் நம்பகமான நட்பு நாடு: பிரதமர் மோடி பெருமிதம்

மாலத்தீவின் நம்பகமான நண்பர் என்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. மாலத்தீவுக்கு ரூ.4,850 கோடி கடன் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

மாலே:

பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இங்கிலாந்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் முடிந்த பிறகு பிரதமர் மோடி மாலத்தீவு சென்றார். மாலேயில் உள்ள வெலினா ஏர்போர்ட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிபராக பதவி ஏற்றது முதல் இந்தியாவுடன் முரண்பட்டு இருந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மூத்த மந்திரிகள் விமான நிலையத்திற்கே வந்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து மாலத்தீவு குடியரசு சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு 21 குண்டுகள் முழங்க சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின், மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுடன் பிரதமர் மோடி இருநாடுகள் இடையே வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பது குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை முடிவில் இந்தியா சார்பில் மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க முடிவு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், பாதுகாப்பு துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் செயல்பட முடிவு செய்துள்ளோம். மாலத்தீவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும். என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்த அதிபர் முய்சுவின் செயல் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வரும் காலங்களில் இந்தியா-மாலத்தீவு நட்புறவு முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்டுமென நம்புகிறேன் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT