உலகம்

3வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு: பிரதமர் மோடியுடன் 5 நாட்டுப் பிரதமர்கள் பங்கேற்பு

பயங்கரவாதத்தை ஒழிக்க நார்வே இந்தியாவுடன் இணைந்து நிற்பதற்கு பிரதமர் மோடி நன்றி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் நெதர்லாந்து பயணத்தை முடித்த அவர், நேற்று நார்வே தலைநகரான ஒஸ்லோ வந்தடைந்தார்.

43 ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் வருகை தந்ததற்கு விமான நிலையத்திலேயே நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.

உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் குறித்து விவாதித்த இரு தலைவர்களும், வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே அமைதி காணமுடியும் என வலியுறுத்தினர். பயங்கரவாதத்தை ஒழிக்க நார்வே இந்தியாவுடன் இணைந்து நிற்பதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், ஒஸ்லோவில் இன்று 3-வது இந்தியா - நார்டிக் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரதமர் மோடியுடன் நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய 5 நார்டிக் நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவுக்கும் இந்த நாடுகளுக்கும் இடையே அண்மையில் நடைமுறைக்கு வந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீடுகளைப் பலமடங்கு அதிகரிப்பது, ஆர்க்டிக் பிராந்திய ஆராய்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.