உலகம்

யோகா பயிற்சி செய்த ஸ்லோவாகியா மாணவர்கள்: நெகிழ்ந்த பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு ஸ்லோவாகியா நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அரசுமுறை பயணமாக இரு ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி முதலில் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாட்டின் நைஸ் நகரில் வைத்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர மோடி ஸ்லோவாகியா சென்றடைந்தார். இரண்டு நாள் பயணமாக ஸ்லோவாக்கியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்லோவாகியாவில் பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி பெல்கிரினி, பிரதமர் பிகோவையும் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்லோவாகியா நாட்டின் மிக உயரிய விருதான “தி ஆர்டர் ஆஃப் தி வைட் டபுள் கிராஸ்" வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஸ்லோவாகியாவில் மாணவர்கள் யோகா செய்வதை பிரதமர் மோடி, அதிபர் பெல்லெக்ரினி உடன் கண்டுகளித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில் கூறியுள்ளதாவது:

ஸ்லோவாகியாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் வழங்கிய ஒரு சிறப்பு யோகா செயல்விளக்கத்தைக் கண்டு நானும் அதிபர் பெல்லெக்ரினியும் பெருமகிழ்ச்சி அடைந்தோம்.

உலகம் சர்வதேச யோகா தினத்தை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில், இளைஞர்கள் யோகாவை விரும்பி ஏற்பதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

யோகா தொடர்ந்து மக்களை நல்வாழ்வில் ஒன்றிணைப்பதைக் காண்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.