உலகம்

இந்தோனேசிய பயணம் நிறைவு: ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ஜாவா தீவில் உள்ள இந்து மத வழிபாட்டுத் தலமான பரம்பானன் கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தனது பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி கடந்த திங்கட்கிழமை அன்று இந்தோனேசியா சென்றார். அவர் அந்நாட்டு அதிபர் பிரபாவோ சுபியாண்டோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதைத் தொடர்ந்து, ஜாவா தீவில் உள்ள இந்து மத வழிபாட்டுத் தலமான பரம்பானன் கோவிலுக்கு (சிவன் கோவில்) பிரதமர் மோடி சென்றார். 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு மேற்கொண்டார். இந்தியாவின் துணையோடு மேற்கொள்ளப்பட உள்ள கோவில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

இந்தோனேசிய பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு நேரில் சென்று இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ வழியனுப்பி வைத்தார்.

இந்நிலையில், இந்தோனேசிய பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றடைந்தார். மெல்போர்ன் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரும் 10-ம் தேதி வரை அங்கு தங்கியிருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீசை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விவாதிக்க உள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா தொழில்முனைவோர் சந்திப்பில் தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்ற உள்ள பிரதமர் மோடியுடன், இந்திய வம்சாவளியினர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.