பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதியில் நேற்று (ஜூன்,8) காலை 7.37 மணியளவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை தொடர்ந்து தீவிரப் பாதுகாப்பு மற்றும் தயார்நிலை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து விடுவிக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கைகள் ரத்து செய்யப்பட்டபோதிலும், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பிலிப்பைன்ஸ் தேசிய காவல் துறைத் தலைவர் ஜெனரல் ஜோஸ் மெலென்சியோ நார்டேட்ஸ் ஜூனியர் இன்று (ஜூன் 9) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சுனாமி எச்சரிக்கைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது ஆபத்து முற்றிலும் நீங்கிவிட்டதைக் குறிக்காது.
இவ்வளவு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு, அடுத்தடுத்து தொடர் நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம் என்பதால் ஆபத்து இன்னும் நீடிக்கிறது.
இந்த தொடர் ஆபத்து காரணமாகவே, மக்கள் தங்குவதற்கு வைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேரிடர் முகாம்கள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு மண்டலங்களில் காவல்துறையினர் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று காலை ஏற்பட்ட 32 கிலோமீட்டர் ஆழத்தில் கடுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்தது.
இருப்பினும், முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளுக்காக மிண்டனாவோ பகுதியில் ஏற்கனவே 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் களமிறக்கப்பட்டு, முழுவீச்சில் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.