இஸ்லாமாபாத்:
டிக்டாக் செயலி மூலம் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடும் பொழுதுபோக்கு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இதனால் சிக்கல்களிலும் சிலர் சிக்கி கொள்கிறார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
பாகிஸ்தானில் ரெயில்வே தண்டவாளம் அருகே நீர்நிலையில் இளைஞர்கள் சிலர் குளித்துக் கொண்டும், வாகனத்தைக் கழுவி கொண்டும் இருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை கவனித்த இளைஞர்கள் பைக்கின் ஆக்சிலேட்டரை திருகி ரெயிலில் செல்பவர்கள் மீது தண்ணீர் தெளித்து விளையாடினர். இதனை அவர்கள் வீடியோவாக பதிவுசெய்தனர்.
அப்போது திடீரென ரெயில் நின்றது. அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் ரெயிலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
ரெயிலில் இருந்து கீழே இறங்கிய பயணிகளில் சிலர் இளைஞர்களை சரமாரி தாக்கினர். மேலும், தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த பைக்கையும் ரெயிலில் ஏற்றிச் சென்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் கற்களைக் கொண்டு ரெயில் பெட்டிகள் மீது வீசினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.