பாகிஸ்தான் பலுசிஸ்தானின் சஹ்ரி பகுதியில் உள்ள முன்னாள் மேயரும், பிஎன்பி (BNP) தலைவருமான சர்தார் நசீர் அகமதுவின் வீட்டுக்குள் புகுந்த பாகிஸ்தான் படையினர் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டில் இருந்த பெண்களை தாக்கிய ராணுவத்தினர், நசீர் அகமதுவின் மகன் கலீல் முசியானி, உமைர் சுமாலானி ஆகிய இருவரையும் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர்.
மேலும் வீட்டில் இருந்த உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களை பாதுகாப்பு படையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து, ரகசிய இடத்திற்குக் கடத்திச் சென்றுள்ளனர்.
இராணுவத்தின் இந்த கொடூரத்தைக் கண்டித்து பிஎன்பி கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் குவெட்டா பிரஸ் கிளப் மற்றும் மாகாணத்தின் பல்வேறு பகுதியில் திரண்டு தங்களின் பலத்த எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள், ' பலுசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் சட்டவிரோதக் கடத்தல்கள், நீதிமன்ற விசாரணையின்றி நிகழ்த்தப்படும் படுகொலைகள் மற்றும் அப்பாவி மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல்களைப் பாகிஸ்தான் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று முழக்கமிட்டனர்.
கலீல் மிசியானி மற்றும் உமைர் சுமாலானி ஆகியோரின் படுகொலை குறித்து ஒரு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த துப்பாக்கிசூட்டிற்கான காரணமான ராணுவ அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.