கோப்புப் படம் 
உலகம்

Super typhoon: பசிபிக்-கில் உருவான அதிதீவிர புயல்.. சீனா, தைவான், ஜப்பானை நெருங்கும் பேராபத்து

பிரான்ஸ் நாட்டின் ஒட்டுமொத்த பரப்பளவை விடப் பெரியது

பசிபிக் பெருங்கடலில் 'பாவி' (Bavi) என்ற அதிதீவிர சூப்பர் டைபூன் புயல் உருவாகியுள்ளது.

சீனாவின் தேசிய வானிலை மையம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, இந்த புயல் 9,40,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு விரிந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ஒட்டுமொத்த பரப்பளவை விடப் பெரியதாக உள்ள இப்புயல் சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைப் போல 9 மடங்கும், ஹாங்காங்கின் நிலப்பரப்பைப் போல 850 மடங்கும் பெரியதாகும்.

ஆசியாவில் பசிபிக் பெருங்கடலிலை ஒட்டிய கிழக்கு கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.

மணிக்கு 20 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் புயல், தைவானை கடந்து சீனாவின் புஜியான் அல்லது ஜெஜியாங் மாகாணங்களுக்கு இடையே நாளை (சனிக்கிழமை) இரவு கரையைக் கடக்க உள்ளது.

தைவான்

புயலின் காரணமாக தைவானின் பங்குச்சந்தைகள் சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இன்று மூடப்பட்டன. தலைநகர் தைபேயில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தைவான், ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தைவானில் வரலாறு காணாத அளவில் 40 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதால் சுமார் 29,000 ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சீனா

புயலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சீனாவில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

புயல் நெருங்குவதை ஒட்டி ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த காற்றோடு மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

புயலின் போது கடுமையான இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை மற்றும் சுழற்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று பிற்பகல் முதல் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வீடுகளில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜப்பானிலும் இப்புயல் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.