உலகம்

இத்தாலிய மீன்களை பாதுகாக்க ஆக்டோ-ப்ளூ திட்டம்: நீல நண்டுகளை சாப்பிடும் ஆக்டோபஸ் குஞ்சுகள்

இத்தாலிய கடல் மீன்களை பாதுகாக்க ‘ஆக்டோ-ப்ளூ’ திட்டம் தொடங்கப்பட்டது.

அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ளூர் இனமான இத்தாலிய மீன்களை அதிகளவில் நீல நிற நண்டுகள் சாப்பிட்டு வருவதால், அந்த வகையான நண்டுகளை கட்டுப்படுத்தி உள்ளூர் இன மீன்களை பாதுகாக்கும் நோக்கில், சுமார் 1,30,000 ஆக்டோபஸ் குஞ்சுகள் இத்தாலிய கடற்பரப்பில் விடப்பட்டுள்ளன.

அட்லாண்டிக் கடல் பகுதி

அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் பகுதியில் நீல நண்டுகள் ஒரு மதிப்புமிக்க கடல் உணவு இனமாக இருந்தாலும், மற்ற இடங்களில் அவை ஆக்கிரமிப்பு இனங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த நண்டுகள் கடந்த நூற்றாண்டில் மத்திய தரைக்கடலில் முதன்முதலில் காணப்பட்டன, ஆனால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து, உள்ளூர் பல்லுயிர் பெருக்கத்திற்கும் மீன்பிடித் தொழிலுக்கும் அச்சுறுத்தலாக மாறின.

ஆக்டோ-ப்ளூ திட்டம்

இதையடுத்து நீல நிற நண்டுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், ‘ஆக்டோ-ப்ளூ’ என்று திட்டத்தை, போலோக்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் எமிலியா-ரொமானியா பிராந்திய அரசாங்கத்துடன் இணைந்து தொடங்கியுள்ளனர்.

இந்த சிறிய ஆக்டோபஸ்கள் கடலில் விடப்படும்போது சில மில்லிமீட்டர் நீளம் மட்டுமே இருக்கும். அவை உயிர் பிழைத்து பெரியவைகளாக மாறும்போது, நீல நண்டுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

சாதகமான சூழ்நிலைகளில், ஒரு கிலோகிராம் எடையுள்ள ஒரு சாதாரண ஆக்டோபஸால் ஒரு நாளைக்கு நான்கு நடுத்தர அளவிலான நீல நண்டுகள் வரை உண்ண முடியும்.

இருப்பினும், இந்தத் திட்டத்தில் ஒரு பெரிய நிச்சயமற்ற தன்மை உள்ளது. பெரும்பாலான குஞ்சு ஆக்டோபஸ் இனங்கள், வயது முதிர்வடையும் கால அளவு வரையில் நீண்ட காலம் உயிர்வாழ்வதில்லை.

ஆக்டோபஸ் இறப்பு விகிதம்

இந்த திட்டம் குறித்து கடல்சார் சூழலியலாளரான கியான்லூகா சாரா கூறுகையில், இதன் பின்னணியில் உள்ள யோசனை சிறந்ததாக இருந்தாலும்,அதன் தாக்கம் முற்றிலும் புறக்கணிக்கத்தக்கதாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

ஆக்டோபஸ் குஞ்சுகளின் இறப்பு விகிதம் சுமார் 99.9 சதவீதம் என்பதால், கடலில் விடப்பட்ட உயிரினங்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே இறுதியில் ஆக்கிரமிப்பு நண்டுகளின் வேட்டையாடும் இனங்களாக மாறக்கூடும் என்றும் அவர் கூறினார்.

கடல்சார் சூழலியலாளர்

இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்டோனியோ கசாலினி கூறுகையில், நாங்கள் ஒரு புதிய இனத்தை அறிமுகப்படுத்தவில்லை, மாறாக அட்ரியாட்டிக் கடலில் ஏற்கனவே இயற்கையாக இருக்கும் ஒரு பூர்வீக இனத்தின் எண்ணிக்கையை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

ஆக்டோபஸ்கள் கடினமானது மற்றும் விரைவாக இனப்பெருக்கம் செய்யக்கூடியது என்பதலும், மேலும் பெண் ஆக்டோபஸ்களால் நூறாயிரக்கணக்கான முட்டைகளை இட முடியும் என்பதாலும் ஆராய்ச்சியாளர்கள் இதை தேர்ந்தெடுத்துள்ளனர்.