உலகம்

மேலும் 2 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது வடகொரியா

வடகொரியா இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியது.

சியோல்:

வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா நேற்று முன்தினம் அதிகாலை ஏவுகணை ஒன்றை வீசியது. இது ஜப்பான் நாட்டின் தோஹோகு பகுதியில் 1,000 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.

இந்நிலையில், வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளது என தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதற்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT