உக்ரைன் மீது ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் பலியாகினர் என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது 5-வது ஆண்டாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது. போரால் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகியும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர்.
உக்ரைன் ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் சமாதான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட செய்தியில், ஒடேசா மற்றும் அப்பகுதியைச் சுற்றி நேற்று மாலை முதல் வான்வழி வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் டிரோன் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.
ரஷியா நடத்திய இந்த தாக்குதலில் மொத்தம் 12 பேர் பலியாகினர். அவர்களில், ஒருவர் இந்தியர். தவிர 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.