உலகம்

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

மூன்று சடலங்களும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.

காசா நகரை சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை நடந்த இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவமனையும் மீட்பு குழுவினரும் தெரிவித்தனர். மேலும், ஹமாஸ் "ராணுவ இயக்கத்தினரை" குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

"காசா நகர நகராட்சி பூங்காவிற்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் நுழைவாயிலை குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழி தாக்குதலை தொடர்ந்து, இரண்டு உடல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக" காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை தெரிவித்தது.

மருத்துவனை தகவல்:

காசா நகரின் தென்மேற்கே உள்ள டெல் அல்-ஹவா பகுதியில், பொதுமக்கள் வாகனம் ஒன்றை குறிவைத்து இஸ்ரேலிய ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக, மேலும் மூன்று சடலங்களும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.

ஹமாஸின் அதிகாரத்தின் கீழ் மீட்பு சேவையாக செயல்படும் குடிமை பாதுகாப்புப் பிரிவு, இரண்டு தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியது.

ஆயுத விநியோகம்:

குடிமை பாதுகாப்பு துறையால் பகிரப்பட்ட படங்களில், இரண்டாவது தாக்குதலுக்கு இலக்கான, முற்றிலுமாக சிதைந்து, உருக்குலைந்த உலோகத்தால் ஆன கறுத்துப்போன ஓடாக மாறியிருந்த காரை, அதை சுற்றி பொதுமக்கள் கூட்டம் கூடியிருக்க, பணியாளர்கள் ஆய்வு செய்வது காட்டப்பட்டது.

ஏ.எஃப்.‌பி. தொடர்பு கொண்டபோது, ​​இஸ்ரேலிய இராணுவம், இரு தாக்குதல்களிலும் "ஹமாஸின் இராணுவ பிரிவான எஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளை சேர்ந்தவர்களை தாக்கியதாக கூறியது.

பின்னர் அது, இறந்தவர்களில் ஒருவரை உமர் முகமது ரோஷ்டி சரஜ் என அடையாளம் கண்டதுடன், அவர் ஹமாஸுக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும் கூறியது. "பயங்கரவாதிகள் ஏற்படுத்திய அச்சுறுத்தலை அகற்றுவதற்காக அவர்கள் தாக்கப்பட்டனர்," என ராணுவ அறிக்கை ஒன்று தெரிவித்தது.

தொடர் தாக்குதல்:

அமெரிக்காவின் ஆதரவுடன் 2025 அக்டோபரில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும், காசா பகுதியில் வன்முறை ஓயவில்லை. தீவிரவாதிகள் எனக் கூறும் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருகிறது.

2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய முன்னெப்போதும் இல்லாத தாக்குதலே காசா போரைத் தூண்டியது. அந்த அமைப்பின் அச்சுறுத்தல்களை ஒழித்தே ஆக வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.