உலகம்

"இஸ்ரேல் மனிதகுலத்திற்கே சாபக்கேடு.. புற்றுநோய்'' - அமைதி பேச்சுவார்த்தைக்கு இடையே பாக். அமைச்சர் கருத்தால் சர்ச்சை

இன்று(ஏப்ரல் 10) ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இன்று (ஏப்ரல் 10) ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த சூழலில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இஸ்ரேல் குறித்து தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகி உள்ளது.

ஈரான் 2 வார போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டபோதும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

நேற்று முன் தினம் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 254 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

மேலும் காசாவில் போர் நிறுத்தம் இருந்தபோதும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு அத்தியாவசிய பொருட்கள் சென்று சேர்வதற்கான பாதைகளை மூடியுள்ளது.

இந்த சூழலில் இஸ்ரேல் குறித்து அமைச்சர் ஆசிப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், "இஸ்ரேல் ஒரு தீய நாடு, மனிதகுலத்திற்கே ஒரு சாபம்.

பாலஸ்தீனப் பிரதேசத்தில் இந்தப் புற்றுநோய் போன்ற அரசை உருவாக்கியவர்கள் நரகத்தில் எரிய வேண்டும். காசா மற்றும் ஈரானுக்குப் பிறகு, இஸ்ரேல் இப்போது லெபனானிலும் ரத்தக்களரியை ஏற்படுத்தி வருகிறது" என்று சாடினார்.

ஆசிப்பின் கருத்துக்களை இஸ்ரேல் கடுமையாகக் கண்டித்துள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், "அமைதிக்குத் தரகர் என்று கூறிக்கொள்ளும் ஒரு நாட்டிலிருந்து வரும் இத்தகைய கருத்துக்கள் பொறுத்துக்கொள்ளப்படாது" என்றும் கூறியுள்ளது.

இவை யூத-விரோதக் கருத்துக்கள் என்றும், தங்கள் நாட்டை அழிக்கக் கோரும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்று வெளியுறவு அமைச்சர் கிடியான் சார் எச்சரித்துள்ளார்.