உலகம்

காசாவில் ஆஸ்பத்திரி மீது இஸ்ரேல் குண்டுவீச்சு

கடந்த மாதம் 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

மாலை மலர்

காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் வடக்கு காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

வடக்கு காசாவின் முக்கிய மருத்துவமனையான அல்-அஹ்லி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் தவித்து வருகிறார்கள். இஸ்ரேல் தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து உருக்குலைந்தது.