அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரை முன்னின்று நடத்தும் ஈரான் ராணுவ பிரிவான புரட்சிகர காவல் படையின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி கொல்லப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் நடத்திய 12 நாள் தாக்குதலின்போது கொல்லப்பட்ட ஜெனரல் முகமது காசெமிக்கு பதிலாகக் காதேமி உளவுத்துறை தலைவராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 6) அதிகாலை தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் அவர் உயிரிழந்ததாக புரட்சிகர காவல்படையான ஐஆர்ஜிசி தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்-உம் அவர் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்த நிலையில் ஈரான் தரப்பில் இருந்தும் அவரின் மரணம் உறுதியாகியுள்ளது.
ஈரானிய புரட்சிகர காவல் படை தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்டுள்ள செய்தியில், "அமெரிக்க-சியோனிச எதிரிகளின் பயங்கரவாதத் தாக்குதலில் மஜித் காதேமி தியாகி ஆகிவிட்டார்" என்று தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை தெஹ்ரானின் குடியிருப்பு பகுதிகளையும் இஸ்ரேல், அமெரிக்கா குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதலில் 4 சிறுமிகள், 2 சிறுவர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அருகேயும் வான்வழித் தாக்குதல் நடந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி வருகிறது.
மறுபுறம் தனது ட்ரூத் ஷோசியல் பதிவில் டிரம்ப், "செவ்வாய்க்கிழமை, இரவு 8:00 மணி (கிழக்கு நேரப்படி)" என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கு ஈரானுக்கு அவர் நிர்ணயித்த காலக்கெடு இதுவாகும்.
ஒருவேளை ஜலசந்தியை திறக்கவில்லை என்றால் ஈரானுக்கு நரகத்தை காட்டுவோம் என டிரம்ப் முன்னதாக கூறியிருந்தார். பதிலுக்கு ஈரானும் நகரத்தை காட்டுவோம் என பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.