உலகம்

கத்தார் ஆலை மீது தாக்குதல் - இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் 17 சதவீதம் பாதிப்பு

உலகின் மிகப் பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு(எல்.என்.ஜி) ஆலை மற்றும் எரிவாயுவில் இருந்து திரவமாக்கும் ஆலை கடும் சேதம் அடைந்தன.

மாலை மலர்

கத்தாரின் வடக்குக் கடற்கரையில் உள்ள முக்கிய எரிவாயு நிலையமான ராஸ் லபான் தொழில்துறை நகரம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் உலகின் மிகப் பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு(எல்.என்.ஜி) ஆலை மற்றும் எரிவாயுவில் இருந்து திரவமாக்கும் ஆலை கடும் சேதம் அடைந்தன. இதனால் அங்கு எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரான் நடத்திய இந்த தாக்குதலால் கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி திறனில் சுமார் 17 சதவீதம் தடைபடும் என்றும் இதனால் ஆண்டு வருவாயில் சுமார் 20 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்றும் கத்தாரின் எரிசக்தி விவகாரங்களுக்கான மந்திரி சாத் அல்-காபி தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்தின் அளவு, இப்பகுதியை 10 முதல் 20 ஆண்டுகள் வரை பின்னுக்குத் தள்ளியுள்ளது. உற்பத்தியை மீண்டும் தொடங்க, முதலில் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

தாக்குதல் காரணமாக எரிவாயு ஆலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்கும் பணிகளால் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு 1.28 கோடி டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி முடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சேதங்கள் காரணமாக இத்தாலி, பெல்ஜியம், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு திரவ இயற்கை எரிவாயு விநியோகங்களுக்கான 5 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால ஒப்பந்தங்களை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கத்தார் அரசு தெரிவித்து உள்ளது.

இந்தியா தனது இயற்கை எரிவாயு தேவையில் சுமார் 40 சதவீதத்தை கத்தாரிடமிருந்தே இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.