உலகம்

அமெரிக்காவுடன் ராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால் - ஈரான் பகிரங்க எச்சரிக்கை

மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்த அறிகுறியும் போரிடும் தரப்புகளுக்கு இல்லை.

அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை காரணமாக, ஈரான் தனது கொள்கையை தற்காப்பு நிலையில் இருந்து முழுமையான தாக்குதல் நிலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளது என்று ஒரு மூத்த ஈரானிய அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அமைதி பேச்சுவார்த்தைகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான முன்னேற்றம் முடங்கியுள்ளது. மேலும், பிப்ரவரி 28-ஆம் தேதியன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலும் தொடங்கிய இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்த அறிகுறியும் போரிடும் தரப்புகளுக்கு இல்லை.

சரியான நேரத்தில் தாக்குதல்:

"ஹோர்முஸ் நீரிணை மற்றும் பரந்த பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்க ஈரானிய அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும், ஏனெனில் கடினமான முடிவுகள் மீது ஈரான் முடிவெடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கும்," என்று அந்த ஈரானிய அதிகாரி கூறினார்.

மேலும், ராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால், அமெரிக்க கடற்படை முற்றுகையை உடைக்க தெஹ்ரான் "சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான" ராணுவ தாக்குதலை நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிதைந்து போன ஒப்பந்தம்:

போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், ஜூன் மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரானும் அமெரிக்காவும் ஒரு இறுதி உடன்பாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நாள் திங்கட்கிழமை ஆகும்.

ஜூன் 17 அன்று கையெழுத்திடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் எதிர்காலம் போன்ற பரந்த பிரச்சினைகளை உள்ளடக்கிய ஒரு உடன்பாட்டை வாஷிங்டனும் தெஹ்ரானும் எட்டுவதற்கு, பரஸ்பர ஒப்புதலுடன் நீட்டிக்கப்படக்கூடிய 60 நாள் காலக்கெடுவை நிர்ணயித்தது.

இருப்பினும், அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதாக அறிவித்த அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு குறித்த தகராறு காரணமாக விரைவாக சிதைந்து போனது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 5-ஆவது பிரிவு, நீர்வழியை நிர்வகிக்கும் உரிமையை தங்களுக்கு அளிப்பதாக தெஹ்ரான் கூறியது, ஆனால் வாஷிங்டன் அந்த விளக்கத்தை நிராகரித்தது. அங்கீகரிக்கப்படாத பாதையில் நீர்வழி வழியாக செல்ல முயன்றதாக கூறப்பட்ட கப்பல்கள் மீது தெஹ்ரான் துப்பாக்கி சூடு நடத்த தொடங்கியதால், மோதல்கள் மீண்டும் தொடங்கின.