செங்கடலின் தெற்குப் பகுதியில் உள்ள பாப் அல்-மாண்டெப் முக்கியமான ஜலசந்தியாகும். ஹார்முஸ் ஜலசந்திக்கு அடுத்தப்படியாக உலகளவில் 12 சதவீதம் எண்ணெய் போக்குவரத்து இந்த ஜலசந்தி வழியாக நடைபெற்று வருகிறது.
இந்த ஜலசந்தி ஏமன் நாட்டின் எல்லையில் உள்ளது. இதன் அண்டை நாடு சவுதி அரேபியா ஆகும். எண்ணெய் போக்குவரத்திற்கு சவுதி அரேபியா இந்த ஜலசந்தியை பயன்படுத்தி வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதில் அரசுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டன. தலைநகர் ஹவுதி கிளர்ச்சி குழு கைவசம் உள்ளது. என்றாலும் உலக நாடுகள் ஏமன் அரசு ராணுவத்தை அங்கீகரித்துள்ளன.
ஏமன் படைக்கு சவுதி அரேபியா உதவி செய்ய முன்வந்தது. சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்ட அரசுடன் இணைந்து சவுதி கூட்டுப்படை ஹவுதி கிளர்ச்சிக்குழுக்கு எதிராக சண்டையிட்டு வருகிறது. அத்துடன் பாப் அல்-மாண்டெப் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு சண்டை சற்று கட்டுக்குள் வந்தது. இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சிக்குழு தாக்குதல் நடத்த தொடங்கியது. இதனால் செங்கடல் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இந்த நிலையில்தான் பாப் அல்-மாண்டெப் ஜலசந்தியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் இருக்கும் மோகா என்ற துறைமுகத்தை ஹவுதி கிளர்ச்சிக்குழு கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சிக்குழு மோகா துறைமுகத்தை கைப்பற்றியது குறுித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில் "ஏமனின் இறையாண்மைக்கு கட்டாயம் மரியாதை செலுத்த வேண்டும். இந்த பிரச்சினை முற்றுகை அல்லது ராணுவ கூட்டணிகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியாது. பேச்சுவார்த்தைக்கு உதவ நாங்கள் தயாராக இரு்ககிறோம். ஏமன் மீதான சவுதி அரேபியாவின் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா அமெரிக்காவின் கூட்டாளியாகும். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த 6 மாதமாக சண்டை நடைபெற்று வரும் நிலையில், சவுதி அரேபியா பேச்சுவார்த்தைக்கு சென்றால் அது ஈரானுக்கு சாதகமாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.