கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரானும் பதிலடி கொடுத்தது. போர் இன்னும் தீர்வின்றி நடந்து வருகிறது.
ஈரான் ராணுவத்தின் பிரிவான புரட்சிகர இஸ்லாமிய காவல் படையான ஐஆர்ஜிசி, அமெரிக்காவுக்கு எதிரான போரை முன்னின்று நடத்தி வருகிறது.
இதனிடையே போர் முடிவுகள் தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுக்கும், ஐஆர்ஜிசிக்கும் இடையே கருத்து நிலவுவதாக கூறப்பட்டு வந்தது.
ஐஆர்ஜிசி-யே ஈரான் அரசை இயக்குவதாகவும், பெசஸ்கியான் பெயரளவிலேயே அதிபராக இருப்பதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
இந்த சூழலில் பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'ஈரான் இன்டர்நேஷனல்' ஊடகம், ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான் தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது.
ஆனால் இந்த ராஜினாமா செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று ஈரான் தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.
ஈரான் அதிபர் அலுவலகத்தின் தகவல் மற்றும் தொடர்புத் துறை துணைத் தலைவர் செய்யது மெஹ்தி தபதபாயி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "வெளிநாட்டு ஊடக நெட்வொர்க் பரப்பும் இந்த வதந்திகள், அவர்கள் ஏற்கனவே நடத்தி வரும் முட்டாள்தனமான ஊடக விளையாட்டுகளின் தொடர்ச்சியே ஆகும்.
அவர்கள் தங்களின் கற்பனையான ஆசைகளை யதார்த்தம் போலச் சித்தரிக்க முயல்கிறார்கள்" என்று சாடியுள்ளார்.
மேலும், "ஈரான் மக்கள் எவ்வாறு ஒற்றுமை மற்றும் எதிர்ப்பின் பாதையில் இருந்து பின்வாங்க மாட்டார்களோ, அதேபோல அதிபர் பெசெஸ்கியானும் மக்களுக்குச் சேவை செய்வதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்" என்று தெரிவித்துள்ளார்.