மத்திய கிழக்கு போரின் போது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மரணதண்டனைகளின் சமீபத்திய நிகழ்வாக, ஆயுதமேந்திய கிளர்ச்சி மற்றும் "பிரிவினைவாத பயங்கரவாத குழுக்களில்" உறுப்பினர்களாக இருந்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட இரண்டு பேருக்கு ஈரான் தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்கிறது.
கடந்த பிப்ரவரியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான மோதல் தொடங்கியதில் இருந்து, ஈரான் மரண தண்டனைகளை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் முழுவதும் நடைபெற்ற அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாகவே தண்டனை பெற்ற பல குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்.
நேற்று (வியாழக்கிழமை) தூக்கிலிடப்பட்ட இரு நபர்களும் மேற்கு ஈரானில் பாதுகாப்பு படையினர் மீதான ஆயுத தாக்குதல்கள் மற்றும் படுகொலை சதித்திட்டங்களில் ஈடுபட்டதாக ஈரான் நீதித்துறை தெரிவித்துள்ளது.
"பிரிவினைவாத பயங்கரவாத குழுக்களில் உறுப்பினராக இருந்தமை, நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கில் ஒரு குழுவை உருவாக்கியமை, குற்ற குழுக்களை அமைப்பதன் மூலம் ஆயுதமேந்திய கிளர்ச்சி, துப்பாக்கி சூடு மற்றும் படுகொலை முயற்சிகளை மேற்கொண்டமை ஆகிய குற்றங்களுக்காக ரமின் சாலே மற்றும் கரீம் மாரூஃபூர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்," என நீதித்துறை தரப்பில் ஆன்லைன் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அவர்கள் எப்போது கைது செய்யப்பட்டனர் என்பது உடனடியாக தெரியவில்லை, ஆனால் அவர்கள் "கலவரத்தின் தலைவர்களாக" ஆவதற்கு பயிற்சி பெற்றிருந்ததாக நீதித்துறை கூறியது.