அமெரிக்கா- ஈரான் இடையே இரண்டு வார கால இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்து எளிதாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிப்பது தொடர்பான பொறுப்பு ஈரான் ஆயுதப்படையிடம் இருக்கிறதாம்.
இதற்கிடையே நேற்று இரண்டு அமெரிக்க கடற்படை கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடந்து சென்றன. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் அமைத்துள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணிக்காக இந்த கப்பல்கள் செல்வதாக கூறப்பட்டன.
இந்த நிலையில் அமெரிக்க கப்பல்கள் சென்றதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் கூட்டு ராணுவ கமாண்டின் செய்தி தொடர்பாளர், அமெரிக்க கப்பல் சென்றதாக கூறப்படும் செய்தியை மறுத்துள்ளார்.
அமெரிக்க கப்பல் ஒன்று கடக்க முயன்ற போது, ஈரான் திரும்பி செல்ல வற்புறுத்தியதாக ஈரான் மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் அமெரிக்கா- ஈரான் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்த உடன்படிக்கையும் ஏற்படவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.