மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களை ஈரான் தாக்கி வருகிறது. இதனால் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைந்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20% இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது. சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்கள் ஏற்றுமதிக்கு இந்தப் பாதையையே நம்பியுள்ளன.
இந்நிலையில், சரக்குக் கப்பல்கள் தனது மேற்பார்வையில் செல்ல ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள தனது லாரக் தீவு அருகே பிரத்யேகப் பாதையை ஈரான் ராணுவம் உருவாக்கியுள்ளது.
இவ்வழியாக இதுவரை இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் 9 கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாகவும், அதில் ஒரு எண்ணெய் டேங்கர் கப்பல் மட்டும் ரூ.18 கோடி செலுத்திய பின்னரே அனுமதிக்கப்பட்டதாகவும் Lloyd's List கடல்சார் தகவல் அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.