அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் மிசிசிப்பி நதிக்கரையில் மஸ்கடின் என்ற நகரம் அமைந்துள்ளது. சுமார் 23,000 மக்கள் மட்டுமே இங்கு வாழ்கின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் மஸ்கடின் நகரில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டிற்குள் 4 பேர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள மற்றொரு வீடு மற்றும் ஒரு உள்ளூர் வணிக நிறுவனத்தில் மேலும் இரண்டு ஆண்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த கிடப்பதும் கண்டறியப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அதே பகுதியைச் சேர்ந்த ரையன் வில்லிஸ் மெக்பார்லண்ட் (52) என்பது தெரியவந்தது.
மூன்று இடங்களில் நடந்த கொலைகளையும் மெக்பார்லண்டினே அடுத்தடுத்து செய்திருக்கிறார் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
தப்பியோடிய மெக்பார்லண்ட் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் அங்கு சென்று அவர் தப்பிக்க முடியாதபடி சுற்றி வளைத்தனர்.
அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற நிலையில் அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதற்கட்ட விசாரணையின்படி, இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் குடும்பத் தகராறே காரணம் என்றும், பலியான 6 பேரும் மெக்பார்லண்டின் உறவினர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.