அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 27-ந்தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்து நிலக்கடலை இறக்குமதியை இந்தோனேசியா நிறுத்தி வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நிலக்கடலையை இறக்குமதி செய்யும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்திய நிலக்கடலையில் அதிக அளவு "அஃபிளாடாக்ஸின்" என்ற விஷப்பொருள் இருப்பதால் இந்த தடையை விதிப்பதாக இந்தோனேசியா அரசு தெரிவித்துள்ளது. அஃபிளாடாக்ஸின் B1 என்பது கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும் ஒரு முக்கிய ரசாயனம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த 27-ந்தேதி அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், நிலக்கடலை இறக்குமதியை நிறுத்தி வைக்கும் உத்தரவு ஏழு நாட்களுக்குப் பிறகு (செப்டம்பர் 3) அமலுக்கு வரும் என்று இந்தோனேசிய தனிமைப்படுத்தல் ஆணையம் (IQA) தெரிவித்துள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 7 நாட்கள் வரை பில்களுடன் கூடிய சரக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும். இருப்பினும், ஏற்றுமதிகள் இந்தோனேசியாவிற்குள் நுழையும்போது ஆய்வு மற்றும் மறு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.