உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்..!- ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா வலியுறுத்தல்

பதற்றத்தை உடனடியாகத் தணிக்குமாறு இந்தியா அழைப்பு விடுக்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் நடந்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பார்வதனேனி ஹரிஷ் பேசியதாவது:-

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடந்து வரும் மோதலில் ஏற்பட்ட சிறிய அமைதிக்கு பிறகு, தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியது மிகவும் கவலையளிக்கிறது.

பதற்றத்தை உடனடியாகத் தணிக்குமாறு இந்தியா அழைப்பு விடுக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களில் பல இந்தியர்கள் காயமடைந்தனர், ஒரு இந்தியர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேலும், ஒருவர் காணாமல் போய் உள்ளார்.

மாலுமிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் வன்முறைச் செயல்களையும், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற சர்வதேச நீர்வழிகள் வழியாகச் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் செயல்களையும் இந்தியா தொடர்ந்து கண்டித்து வருகிறது.

இப்பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும்.

சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, இப்பிராந்தியத்தின் சர்வதேச நீர்வழிகள் வழியாகச் சுதந்திரமான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் ஆகியவை மிக விரைவில் மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.