உலகம்

"ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள்"-இந்தியா, நியூசிலாந்து இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க 'வியூகக் கூட்டாண்மை' ஒப்பந்தம்!

"நமது நெருங்கிய ஒத்துழைப்பு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் புதிய ஆற்றலையும் உருவாக்கும்."

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு ‘வியூகக் கூட்டாண்மை’ என்ற அடுத்த கட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்திற்கு மேற்கொண்டுள்ள முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

2030-க்கான வரைபடம்:

இரு நாட்டு உறவுகளையும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு வழிநடத்த இந்த விரிவான வரைபடம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, இருதரப்பு வர்த்தகத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் '7 பில்லியன்' நியூசிலாந்து டாலராக ($35,000 கோடி ரூபாய்) இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்:

சமீபத்தில் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக நடைமுறைக்குக் கொண்டுவர இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதன் மூலம் நியூசிலாந்தின் 95% ஏற்றுமதிப் பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்படும், அதில் 57% உடனடி வரிவிலக்குப் பெறும். அதேபோல் இந்தியாவின் 100% ஏற்றுமதிப் பொருட்களுக்கு நியூசிலாந்து வரிவிலக்கு அளிக்கிறது.

பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு:

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட, இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர தளவாட ஆதரவு ஒப்பந்தம் மற்றும் புதிய கடல்சார் பாதுகாப்பு உரையாடல் தொடங்கப்படவுள்ளன.

18 முக்கிய முடிவுகள்:

வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சுற்றுலா, விளையாட்டு, கல்வி, பேரிடர் மேலாண்மை, பால்வளத் துறை மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 18 முக்கிய கூட்டு அறிவிப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில்,

"இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட கடல்சார் நாடுகள். நாம் 'ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள்' என்பதைப் போல இந்த சந்திப்பு அமைந்துள்ளது.

நமது நெருங்கிய ஒத்துழைப்பு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் புதிய ஆற்றலையும் உருவாக்கும்."

இதனைத்தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், "பிரதமர் மோடியின் இந்த வரலாற்றுப் பயணம் இரு நாட்டு உறவில் ஒரு முக்கிய மைல்கல். சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நியூசிலாந்து வணிகங்களுக்கு இந்தியாவின் 140 கோடி மக்கள் தொகைக் கொண்ட சந்தையில் புதிய கதவுகளைத் திறக்கும்." என்றார்.

இதனைத் தொடர்ந்து ஆக்லாந்தில் உள்ள ஸ்பார்க் அரேனாவில் நியூசிலாந்து வாழ் இந்திய மக்கள் பங்கேற்ற பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சந்திப்பு இரு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.