உலகம்

ஊழல் வழக்கு: அதானி மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம் விசாரித்து வருகிறது.

மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இதனிடையே கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு இரு வழக்குகளை தொடுத்துள்ளது.

இந்த வழக்கில் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மோசடி செய்து அதானி குழுமம் நிதி திரட்டிய புகாரை விசாரித்து வரும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம், இந்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நியூயார்க் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT