உலகம்

எல்லைப் பிரச்சினைக்கு 'அரசியல் தீர்வு' காண இந்தியா-சீனா உடன்பாடு: வெளியுறவு அமைச்சகம் தகவல்

இரு தரப்பினரும் நேர்மறையாக ஆய்வு செய்தனர் என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (LAC) நெடுகிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவது ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்தியா சீனாவிடம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் எல்லையை வரையறுப்பது மற்றும் எல்லை தாண்டிய ஒத்துழைப்பு பணிகளை தொடர்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

டெல்லியில், வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளியிட்ட அறிக்கையில், தோவல் மற்றும் வாங் இந்தியா-சீனா எல்லை பிரச்சினை குறித்து "வெளிப்படையான மற்றும் ஆழமான" கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டதாகவும், "ஒட்டுமொத்த மற்றும் நீண்டகால நலன்களின்" அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு "அரசியல் தீர்வு" காணும் தங்களது பணியை தொடர ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா வலியுறுத்தல்:

தோவல் இரண்டு நாள் பயணமாக கடந்த திங்கள் கிழமை பெய்ஜிங் சென்றிருந்தார். 2020-ஆம் ஆண்டு நடந்த கொடூரமான கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான இரு அண்டை நாடுகளும் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே அவரது இந்த பயணம் பார்க்கப்படுகிறது.

"இருதரப்பு உறவின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக, இந்தியா-சீனா எல்லை பகுதிகளில் அமைதியையும் நிம்மதியையும் பேணுவதன் முக்கியத்துவத்தை இந்திய தரப்பு வலியுறுத்தியது," என்று அது கூறியது.

தீர்வு காண ஒப்புதல்:

சிறப்பு பிரதிநிதிகள் உரையாடல் கட்டமைப்பின் கீழ் நடைபெற்ற தோவல்-வாங் பேச்சுவார்த்தைகள், வரவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் எதிர்பார்க்கப்படும் பயணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு நடந்தன. தோவல் மற்றும் வாங் இந்த பேச்சுவார்த்தைகளுக்கான நியமிக்கப்பட்ட சிறப்புப் பிரதிநிதிகள் ஆவர்.

"பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்கு பார்வையுடனும், இரு சிறப்பு பிரதிநிதிகளும் இந்தியா-சீனா எல்லை பிரச்சினை குறித்து வெளிப்படையான மற்றும் ஆழமான கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டனர். மேலும், தங்களின் ஒட்டுமொத்த மற்றும் நீண்டகால நலன்களின் பின்னணியில் எல்லை பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காணும் தங்கள் பணியை தொடர ஒப்புக்கொண்டனர்," என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.