பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முதல் கட்டமாக, இந்தோனேசிய பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி மெல்போர்னில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ஆல்பனீசை இன்று சந்தித்தார். இருநாட்டு பிரதிநிதிகள் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தில் இருவரும் பங்கேற்று இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளிடையே 18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், மெல்போர்ன் நகரின் மார்வெல் ஸ்டேடியத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
பயங்கரவாதிகள் மீது இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் எதிரொலித்தது.
பயங்கரவாத முகாம்கள் மீதான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு திறன் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை உலகிற்கு நிரூபிக்கப்பட்டது.
கடந்த 12 ஆண்டுகளில் 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டம் உலகளாவிய பிராண்டாக மாறியுள்ளது. சர்வதேச சந்தையில் இந்திய தயாரிப்புகள் பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் இந்த எல்லை தாண்டிய துல்லிய தாக்குதலை (Operation Sindoor) வெற்றிகரமாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.