அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஹோசேவில் உள்ள பள்ளியில் படித்தவர்கள் சூர்யா மிதா (வயது 22), ஆதர்ஷ் ஹைரேமத் (22). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களான இவர்களுடன் அமெரிக்காவை சேர்ந்த பிரெண்டன் பூடி (22) என்பவரும் படித்தார்.
பள்ளியில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்த இவர்களுக்கு சிறுவயதிலேயே தொழில் தொடங்கி கோடீஸ்வரர்களாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. அந்த கனவை நனவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே ஆதர்ஷ்சுக்கு பிரபல ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்கவும், சூர்யா, பிரெண்டனுக்கு ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் படிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் தற்போதைய தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் அளவுக்கு திறன் வாய்ந்த அவர்கள் புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற இலக்கு இருந்து கொண்டே இருந்தது.
இந்தநிலையில் அவர்கள் படித்து கொண்டிருக்கும் போதே சிலிக்கான் பள்ளத்தாக்கில் செயல்படும் மிகப்பெரிய நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்புக்கு தேவையான மென்பொருள் உரையாடு ஏ.ஐ.செயலியான 'மெட்கோர்'ரை உருவாக்கினர்.
இது பெருநிறுவன வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகி வெற்றிப்பெற தற்போது புதிதாக ரூ.3 ஆயிரத்து 100 கோடி (350 பில்லியன் டாலர்கள்) முதலீட்டை ஈர்த்துள்ளது. இதனால் அந்த மெட்கோர் நிறுவனத்தின் தலா 22 சதவீத பங்குகளை கொண்டுள்ள சூர்யா மிதா, ஆதர்ஷ் ஹைரேமத் மற்றும் பிரெண்டன் பூடி ஆகியோர் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாகிவிட்டனர். இதன்மூலம் சுயதொழில் மூலமாக கோடீஸ்வரர்கள் ஆன பட்டியலில் முதலிடத்தில் இருந்த 'பேஸ்புக்' நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சாதனையை இவர்கள் முறியடித்தனர்.