சிங்கப்பூர்:
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்டி ஏற்பட்டுள்ள நிலையில், அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் புரட்சியாக உருவெடுத்தது. நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்த நிலையில், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்தபடி பதவியை ராஜினாமா செய்தார்.
சிங்கப்பூரில் கோத்தபய தங்கி இருப்பதற்கான, சமூக வருகை அனுமதி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து கோத்தபய ராஜபக்சேக்கு மேலும் 2 வாரம் அனுமதியை நீட்டிக்கும்படி சிங்கப்பூரிடம் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்தது.
இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து இன்று வெளியேறினார். அவருக்கு வழங்கப்பட்ட சமூக வருகை அனுமதி காலாவதியானதால் வெளியேறியதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. அவர் தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாய்லாந்துக்கு கோத்தபய ராஜபக்சேவின் தற்காலிக பயணத்தை தாய்லாந்து பிரதமர் உறுதி செய்துள்ளார். மேலும், நிரந்தர அடைக்கலம் கோரும்போது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டேன் என்று கோத்தபய உறுதியளித்திருப்பதாக தாய்லாந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.