செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முன்னணி இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், அதிநவீன தொழில்நுட்பங்களை விரைவுபடுத்தவும் கூகுள் நிறுவனம் தனது உயர் தலைமைப் பொறுப்புகளில் பெரும் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக கூகுள் தலைமைச் செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் 30-வது ஊழியராக இணைந்து, கடந்த 27 ஆண்டுகளாக தேடுபொறி, கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் பிரைன் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களின் கட்டமைப்புக்கு வித்திட்ட ஜெஃப் டீன் நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூகுளின் மூத்த ஆராய்ச்சியாளர் சஞ்சய் கெமாவாத் உடன் இணைந்து புதிய சுதந்திரமான தொண்டு நிறுவனத்தைத் தொடங்கவுள்ளார்.
கூகுள் டீப்மைண்ட் அமைப்பின் இணை நிறுவனரான டெமிஸ் ஹசாபிஸ், Alphabet நிறுவனத்தின் முதன்மை அறிவியலாளராகவும், DeepMind அமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் AGI மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளில் முழு கவனம் செலுத்துவார்.
கூகுள் டீப்மைண்டின் தற்போதைய தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியான கொரே கவுக்சியோக்லு, சீனியர் வைஸ் பிரசிடென்டாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர் ஜெமினி மாடல்கள், AI ஆராய்ச்சிகள் மற்றும் செயலிகளின் அன்றாட செயல்பாடுகளை நேரடியாகத் தலைமையேற்று வழி நடத்துவார்.
* கூகுள் உருவாக்கியுள்ள Gemini AI செயலியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 95 கோடியைத் தாண்டியுள்ளது.
* திறந்த மூலக் குறியீடு கொண்ட Gemma மாடல்கள் 90 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளன.
"செயற்கை நுண்ணறிவுத் துறையில் நாங்கள் அடைந்துள்ள வேகம் மிக முக்கியமானது. இந்த மாற்றங்களின் மூலம் எங்களது AI பயணத்தையும் AGI மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளையும் அடுத்தகட்டத்திற்கு விரைவாகக் கொண்டு செல்ல முடியும்" என்று தெரிவித்துள்ளார்.