அமெரிக்காவில் உள்ள ஒரு தேசிய அருங்காட்சியகத்தில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது அமெரிக்க ராணுவத்திற்காக பயன்படுத்தப்பட்ட 32 வயதான ஜெர்மனியை சேர்ந்த ராணுவ புறாவின் எச்சங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
முதலாம் உலகப் போருக்கு முன்பு 1917-ஆம் ஆண்டு கைசர் என்ற குஞ்சு புறா ஒன்று ஜெர்மனியில் பொறிக்கப்பட்டது.
பிறந்து ஐந்து நாட்களே ஆன அந்த புறாவின் இடது காலில் ஒரு அலுமினிய அடையாள வளையம் பொருத்தப்பட்டது. அந்த சிறிய வளையத்தில் ஜெர்மானியப் பேரரசின் மகுடமும், 17-0350-47 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டிருந்தன. அதன் முதல் இரண்டு இலக்கங்கள் அது பிறந்த ஆண்டைக் குறித்தன.
இதையடுத்து சுமார் ஆறு வாரமான கைசர் புறா, ஜெர்மானிய பேரரசின் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
முதலாம் உலகப் போரின் போது, ராணுவத் தகவல் தொடர்புகளில் புறாக்கள் ஒரு முக்கிய அங்கமாக மாறியிருந்தன. குறிப்பாக பீரங்கித் தாக்குதலால் சாதாரண தகவல் தொடர்பு முறைகள் செயலிழக்கச் செய்யப்படக்கூடிய இடங்களில் இது முக்கியத்துவம் பெற்றது.
பயிற்சி பெற்ற கைசர் புறா சாலை, கம்பி மற்றும் போர்க்களத்தின் வழியே பாதை இல்லாத பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஒரு சிறிய செய்தியை திரும்பக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. இந்த பணிக்காக கைசர் பயிற்சி பெற்று, இறுதியில் வடக்கு பிரான்சில் உள்ள ஜெர்மானிய நிலைகளுக்கு இடையே தூது பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.
1917 ஏப்ரலில் அமெரிக்கா போர் செய்த போது, அமெரிக்க ராணுவம் தனது சொந்த புறா சேவையை உருவாக்கத் தொடங்கியது.
1918 செப்டம்பரில் நடந்த மியூஸ்-ஆர்கோன் தாக்குதலின்போது, நூற்றுக்கணக்கான அமெரிக்க ராணுவப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன.
சண்டை நடக்கும் இடங்களுக்கு அருகில் இயங்கிய படைப்பிரிவுகளிடமிருந்து செய்திகளை இந்தப் புறாக்கள் கொண்டு சென்றன. வழக்கமான தகவல் தொடர்பு முறைகள் தோல்வி அடைந்தபோது, இவை தளபதிகளுக்கு மற்றொரு தகவல் தொடர்பு வழியை வழங்கின.
28-வது காலாட்படைப் பிரிவைச் சேர்ந்த அமெரிக்க வீரர்கள் ஆர்கோன் காட்டில் இருந்த ஒரு ஜெர்மானிய புதைக் கிடங்கை கைப்பற்றினர். அங்கு கைவிடப்பட்டிருந்த உபகரணங்களில், 10 ஜெர்மானியப் புறாக்கள் இருந்த ஒரு கூடையில் கைசர் புறாவும் இருந்தது.
1918 நவம்பர் 11 அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, கைசர் புறாவை அமெரிக்க ராணுவம் தாயகம் கொண்டு வந்தது. 1919-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி, கைசர் மேலும் 21 ஜெர்மானியப் புறாக்களுடன் போக்குவரத்துக் கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு வந்தடைந்தது.
கைசர் புறா இறுதியில் நியூ ஜெர்சியில் உள்ள சிக்னல் கார்ப்ஸ் புறா மையத்திற்கு மாற்றப்பட்டு, அமெரிக்க ராணுவத்திற்காகப் புறாக்களை இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது.
1930-களில் முதலாம் உலகப் போரிலிருந்து அமெரிக்க ராணுவத்திடம் எஞ்சியிருந்த கடைசி ஜெர்மானியப் புறாவாக கைசர் இருந்தது. பின்னர் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நுழைந்தபோது, கைசரின் வம்சாவளியைச் சேர்ந்த புறாக்கள் ஐரோப்பாவிலும் பசிபிக்கிலும் ராணுவ சேவைக்கு அனுப்பப்பட்டன.
கைசர் புறா ராணுவ பணிகளுக்கு பயன்படுத்தப்பட முடியாமல் மிகவும் வயதாகிவிட்டது. அதற்குப் பதிலாக அந்த புறா மிசோரியில் உள்ள கேம்ப் க்ரௌடருக்கு மாற்றப்பட்டது. அங்கு ராணுவம் தனது புறா இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி மையத்தை இயக்கியது.
1945-ஆம் ஆண்டிற்குள், கைசர் புறா ராணுவத்திற்காக 75-க்கும் மேற்பட்ட பறவைகளை உருவாக்கியிருந்தது.
கைசர் 31-வது வயதின் போது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஃபோர்ட் மாகாணத்திற்கு திருப்பி அனுப்பபட்டது.
அந்த ஆண்டின் பிற்பகுதியில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்கன் லீஜியன் குழுவான ஃபர்ஸ்ட் ரீட்ரீட் போஸ்ட் எண் 667, இரண்டு போர்களில் அது ஆற்றிய சேவைக்காக கைசரை கௌரவ உறுப்பினராக ஆக்கியது.
கைசர் புறாவுக்காக ஒரு சிறப்பு கால்பட்டை உருவாக்கப்பட்டு, அதில் அதனது பெயரும் அந்தப் பிரிவின் குறியீடும் பொறிக்கப்பட்டன.
ஜெர்மானிய ராணுவ அடையாள எண்ணைத் தாங்கி தன் வாழ்வைத் தொடங்கிய ஒரு புறாவுக்கு, அது ஓர் அசாதாரணமான இரண்டாவது அடையாளமாக அது இருந்தது.
1949 ஜனவரி 20 அன்று ஜனாதிபதி ஹாரி ட்ரூமனின் பதவியேற்பு விழாவிற்காக அது வாஷிங்டனுக்கு பயணம் செய்தது. அங்கு ஜி.ஐ. ஜோ மற்றும் ஜங்கிள் ஜோ என்ற மற்ற இரண்டு புகழ்பெற்ற ராணுவப் புறாக்களுடன், சிக்னல் கார்ப்ஸ் கண்காட்சியின் ஒரு பகுதியாக அது தோன்றியது.
அதே ஆண்டு ஹாலோவீன் இரவில் ஃபோர்ட் மான்மவுத்தில் கைசர் புறா இறந்தது. அதற்கு 32 வயதாக இருந்தது. அதன் பெயருக்குக் காரணமான ஜெர்மானியப் பேரரசரை விட, முதலாம் உலகப் போரில் பணியாற்றியதாக அறியப்பட்ட மற்ற அனைத்து வழி அறியும் புறாக்களை விடவும் அது அதிக காலம் வாழ்ந்திருந்தது.
அதன் ராணுவ சேவை, செய்திகளைக் கொண்டு செல்வதிலிருந்து அடுத்த தலைமுறை ராணுவப் புறாக்களை உருவாக்குவதற்கு வெகு காலத்திற்கு முன்பே மாறியிருந்தது.
1957-ல் அமெரிக்க ராணுவம் தனது புறா சேவையை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, கைசரின் வழித்தோன்றல்களான பறவைகள் பொதுமக்களுக்கு விற்கப்பட்டன.
ராணுவத்தின் புறா திட்டம் மூடப்பட்டதால் கைசரின் குடும்ப வம்சம் அழிந்துவிடவில்லை. பந்தயத்திற்காக வளர்க்கப்பட்ட பறவைகள் உட்பட, அதன் வழித்தோன்றல்கள் தனியார் புறாக்கூடுகளில் தொடர்ந்து வளர்க்கப்பட்டு வருகின்றன.