உலகம்

அரசியலுக்கு முழுக்கு..! பிரான்ஸ் அதிபர் சொன்ன பரபரப்பு தகவல்

பிரான்சில் அடுத்த அதிபர் தேர்தல் 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் அரசியலிலிருந்து விரைவில் விலக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேக்ரானின் பதவிக்காலம் இன்னும் சரியாக ஒரு வருடத்தில் முடிவடைய உள்ளது. 2017-ம் ஆண்டு, தனது 37-வது வயதில் முதன்முறையாக பிரான்ஸ் நாட்டின் அதிபராக மேக்ரான் தேர்ந்தெடுக்கப்பட்டார் மேக்ரான்.

பிரான்ஸ் அரசியல் வரலாற்றிலேயே அவ்வளவு இளம் வயதில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேக்ரான்தான். 2022-ம் ஆண்டு, அவர் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரான்சில் அடுத்த அதிபர் தேர்தல் 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. பிரான்சைப் பொறுத்தவரை, அரசியல் சாசனத்தின்படி ஒரு நபர் மூன்றாவது முறை அதிபராக முடியாது. ஆகவே, அடுத்த தேர்தலில் மேக்ரான் போட்டியிட முடியாது.

இந்நிலையில், ஐரோப்பிய கவுன்சில் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக சைப்ரஸ் தீவுக்கு சென்றுள்ள மேக்ரான், சைப்ரஸின் தலைநகரான நிகோசியாவில் மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர், நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் அரசியலில் ஈடுபடவில்லை. என் பதவிக்காலம் முடிந்த பின்பும் நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று கூறினார். அதைத்தொடர்ந்து, தனது பதவிக்காலம் முடிவடைந்தபின், மேக்ரான் அரசியலுக்கு முழுக்குப் போட இருப்பதை உறுதிப்படுத்தினார்.