ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை போற்றும் வகையில் இளம் கலைஞர்கள் சார்பில் நடந்த நடனம், இசை கச்சேரி உள்ளிட்டவற்றை அவர் கண்டு ரசித்தார்.
இந்நிலையில், நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நான் நெதர்லாந்தில் இருக்கிறேன் என்பதே மறந்துவிட்டது. இந்தியாவில் மட்டுமே கொண்டாடப்படும் ஒரு திருவிழாவில் கலந்து கொண்டது போன்று உணர்ந்தேன்.
இந்திய நட்புறவுக்கான வாழும் அடையாளங்களில் ஒன்றாக தி ஹேக் உருவாகி இருப்பது போன்று உள்ளது.
நெதர்லாந்தின் தலைமையுடன் எப்போதெல்லாம் பேசுகிறேனோ, அப்போதெல்லாம் இந்திய வம்சாவளியினரை பற்றி அவர்கள் பாராட்டும் வகையிலேயே பேசுகின்றனர்.
நெதர்லாந்தின் சமூக மற்றும் பொருளாதாரத்தில் நீங்கள் பெரும் பங்காற்றி வருகிறீர்கள். இதனால், ஒவ்வோர் இந்தியரும் பெருமை அடைகிறார்.
இந்தியா இன்று பெரிய அளவில் கனவு காண்கிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் அரை கடத்திகள் ஆகிய துறைகளில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல இந்திய இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.
உலக அளவில் 3-வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. உலகில் மிக பெரிய அரசு நிதியுடன் கூடிய சுகாதார காப்பீட்டை இந்தியா செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.