உலகம்

‘வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு... தொடரும் முடிவில்லா அழிவுச்சுழற்சி’ - போர் நாயகர்களை காட்டமாக விமர்சித்த போப்!

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் சீரழிகிறது என அதிபர் ட்ரம்பை மறைமுகமாக விமர்சித்துள்ளார் போப் லியோ.

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும், போப் ஆண்டவர் லியோவிற்கும் இடையே மோதல்போக்கு நிலவிவரும் நிலையில், ‘போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை, ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் சீரழிக்கப்பட்டு வருகிறது’ என கடுமையாக சாடியுள்ளார்.

போப் லியோ XIV தனது ஆப்பிரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று கேமரூன் சென்றடைந்தார். இந்நிலையில் இன்று பமெண்டாவில் உள்ள புனித ஜோசப் பேராலயத்தில் உரையாற்றிய அவர்,

“உங்கள் நிலத்தின் வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள், பொதுவாக அந்த லாபத்தின் பெரும்பகுதியை ஆயுதங்களில் முதலீடு செய்கிறார்கள்; இதன் மூலம் அவர்கள் ஒரு முடிவில்லாத வன்முறை மற்றும் அழிவுச் சுழற்சியைத் தொடர்கிறார்கள்.

இது தலைகீழாக மாறிய உலகம்; கடவுளின் படைப்பைச் சுரண்டும் இச்செயலை, நேர்மையான மனசாட்சி கொண்ட ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டும் மற்றும் நிராகரிக்க வேண்டும்,” என தெரிவித்தார்.

மேலும் “ஒன்றை அழிப்பதற்கு ஒரு கணமே போதும், ஆனால் அதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒரு ஆயுட்காலம் கூடப் போதாது என்பதைப் போரின் தலைவர்கள் அறியாதது போல் நடிக்கிறார்கள்.” என்றும் தெரிவித்தார்.