சவூதி அரேபியா
சவூதி அரேபியாவின் செங்கடல் பகுதியில் யான்பு துறைமுகத்தில் அமைந்துள்ள SAMREF எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது இன்று (மார்ச் 19) ஈரான் டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
சவூதி அராம்கோ மற்றும் எக்ஸான் மொபில் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்த ஆலை இயங்கி வருகிறது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, தாக்குதலுக்கு முன்னதாக ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள பல எண்ணெய் நிலையங்களை காலி செய்யுமாறு ஈரான் எச்சரித்தது. இதில் SAMREF நிலையமும் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஈரான் ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய இருக்கும் ஒரே வழித்தடம் இந்த யான்பு துறைமுகம் மட்டுமே.
தற்போது யான்பு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வை ஏற்படுத்தக்கூடும்.
குவைத்
மேலும் எண்ணெய் வளம் மிக்க சிறிய நாடான குவைத்தில், இன்று ஈரான் டிரோன் தாக்குதலால் மினா அப்துல்லா சுத்திகரிப்பு நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று அருகிலுள்ள மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்திலும் ஈரான் டிரோன் தாக்குதலால் தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தெற்கு பார்ஸ்
நேற்று ஈரானின் முக்கிய எரிசக்தி மையமான தெற்கு பார்ஸ் எண்ணெய் வயல் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக கத்தாரின் லாஸ் ரபான் நகரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை ஈரான் தாக்கியது.
மீண்டும் கத்தாரை தாக்கினால் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலை தடம் தெரியாமல் அழித்துவிடுவேன் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிரட்டலை அலட்சியம் செய்த ஈரான் சவூதி அரேபிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.