மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஈரான் குவைத் மற்றும் பஹ்ரைன் நோக்கி ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்க மத்திய கட்டளை ஈரானின் Qeshm தீவில் உள்ள ராணுவ கட்டுப்பாட்டு மையத்தை குறிவைத்து “தற்காப்பு நடவடிக்கையாக” வான்வழித் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க படையினருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த மோதல், முக்கிய எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியைச் சுற்றி நடைபெற்று வருவதால், உலக எண்ணெய் சந்தை மற்றும் பிராந்திய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளன.
இந்நிலையில், பஹ்ரைன் அரசு நாடு முழுவதும் அவசர எச்சரிக்கை சைரன்களை இயக்கி, குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் அமெரிக்கா–ஈரான் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், அருகிலுள்ள பாதுகாப்பு தங்குமிடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும், பாதுகாப்பு அமைப்புகள் முழு கண்காணிப்பிலும் செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த போர் பதற்றம் காரணமாக, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் பிராந்திய பாதுகாப்பு நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மேலும் தீவிரமடைந்தால், அதன் தாக்கம் வளைகுடா நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், பிராந்திய நாடுகள் அனைத்தும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றன.