உலகம்

காங்கோ நாட்டை தொடர்ந்து அச்சுறுத்தும் எபோலா வைரஸ் - 65 ஆக உயர்ந்த உயிரிழப்பு

காங்கோவின் இடுரி மாகாணத்தில் 246 பேர் எபோலா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்க சுகாதார அமைப்பு தகவல்

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் இடுரி மாகாணத்தில் புதிதாக பரவிவரும் எபோலா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக, 65 நபர்கள் உயிரிழந்துள்ளதாக ஆப்பிரிக்க உயர்மட்ட சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வாந்தி, இரத்தம் மற்றும் விந்து போன்ற உடல் திரவங்கள் மூலம் மிக எளிதில் பரவக்கூடிய எபோலா வைரஸ், பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

காங்கோவில் கடைசியாக பரவிய எபோலா நோய் தொற்றால், 43 நபர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து தற்போது ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக 246 நபர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1976ஆம் ஆண்டு முதல் காங்கோவில் எபோலா நோய் தொற்று பரவி வருகிறது.

இந்நிலையில் தற்போது 17வது முறையாக மீண்டும் இந்த நோய் தொற்று பரவ ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.