தெற்கு பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மின்டானோவிற்கு அருகே 35 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் சர்வதேச கண்காணிப்பு முகமைகளின் அதிகாரிகள், சுனாமி எச்சரிக்கைகளை உடனடியாக விடுத்து, பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தினர்.
மேலும், கடலோரப் பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.
பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பலாவ், தைவான், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் சுனாமி ஏற்படக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.