இலங்கையின் கொழும்புவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 22 பௌத்த துறவிகளிடம் இருந்து ரூ.110 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உளவுத்துறை தகவலின் அடிப்படையில், காவல்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சனிக்கிழமை இரவு நடத்திய சோதனையின்போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
சுமார் 110 கிலோகிராம் எடையுள்ள குஷ் மற்றும் ஹேஷ் வகை போதைப்பொருட்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள் சூட்கேஸ்களின் அடிப்பகுதிகளிலும், பள்ளி உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பொட்டலங்களுக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு துறவியும் ஐந்து கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை பிரித்து எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
விசாரணையில் இவர்கள் ஏப்ரல் 22 அன்று பேங்காக் சென்றதும், இவர்களின் பயணச் செலவை வேறொருவர் ஏற்றுக் கொண்டதும் தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்தபோது இவர்கள் சாதாரண உடையில் இருந்ததற்கான ஆதாரங்களும் அவர்களின் கைபேசிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் கொழும்பு விமான நிலைய வரலாற்றிலேயே அதிக அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வாகக் கருதப்படுகிறது.