டொமினிகன் குடியரசில் உள்ள லா ரொமானா சர்வதேச விமான நிலையத்தில் ஒரு தனியார் ஜெட் விமானம் அவசரகால தரையிறக்க முயற்சியில் ஈடுபட்டது.
அந்நிலையில் விமானம் முழுமையாக தரையிறங்கும் முன்பே விழுந்து நொறுங்கியது. மேலும் அவ்விமானம் சுக்குநூறாக சிதறி தீ விபத்துக்குள்ளானது.
முன்னதாக சுமார் 16 கடல் மைல் தொலைவில் இருந்தபோது விமானம் அவசரநிலையை அறிவித்தது. பின்னர் விமான நிலையத்திற்கு திரும்பும் போது இவ்விபத்து அரங்கேறியது.
உடனடியாக தீயணைப்பு பணிகள் நடைபெற்றது. தீயணைப்பு வீரர்களின் நெடிய நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்நிலையில் விமான நிலையம் முழுவதுமாக கரும்புகைகள் காணப்பட்டன.
முதற்கட்ட ஆய்வுகளின்படி, சம்பந்தப்பட்ட இவ்விமானம் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி200 ரகதை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் விமானி மற்றும் துணை விமானி உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விமானத்தைப் பரிசோதித்து, அதன் பயணத் தரவுகளை ஆய்வு செய்து வருகின்றனர் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.