உலகம்

டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப் போவதை முன்கூட்டியே சொன்ன வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்? - வீடியோ வைரல்

கோல் தாமஸ் ஆலன் என்ற 31 வயது பொறியாளர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் நேற்று ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற 'வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்து' நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதன்போது கோல் தாமஸ் ஆலன் என்ற 31 வயது பொறியாளர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். டிரம்ப் மற்றும் அவரின் மனைவி அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தச் சம்பவத்திற்கு முன்பாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் அளித்த ஒரு பேட்டி இப்போது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பேட்டியில் பேசிய அவர், "இன்று இரவு சில ஷாட்கள் (Shots) சுடப்படும். இது மிகவும் வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கப் போகிறது. டிரம்ப்பின் ஸ்டைலைப் பார்க்க அனைவரும் தயாராக இருங்கள்" என்று கூறியிருந்தார்.

டிரம்ப் தனது பேச்சின் மூலம் ஊடகங்களைக் கடுமையாக விமர்சிப்பார் என்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே இரவு நிஜமாகவே துப்பாக்கிச் சூடு நடந்ததால், அவரது வார்த்தைகள் முன்கூட்டியே திட்டமிட்ட சதி போல சமூக வலைத்தளங்களில் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால், இது ஒரு தற்செயலான வார்த்தைப் பிரயோகம் மட்டுமே என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தாக்குதலில் இருந்து தப்பிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், அதிபர் பதவி என்பது ஒரு ஆபத்தான வேலை. இத்தகைய சவால்கள் இந்தப் பதவியில் ஒரு பகுதிதான் என்றார்.

பாதுகாப்பு அமைப்புகளின் உடனடி நடவடிக்கையைப் பாராட்டிய ட்ரம்ப், இந்த விருந்து நிகழ்ச்சியை சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்டமாக நடத்தப்போவதாக உறுதி அளித்தார்.