உலகம்

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு- பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு

தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டன.

இதற்கிடையே தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி மண்ணில் புதைந்தனர். மீட்புக்குழு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பலர் பலியாகி இருப்பது தெரிந்தது. அவர்களது உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.

இதில் 157 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து நடந்த மீட்புப்பணியில் மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 229-ஆக உயர்ந்துள்ளது. சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்த பலரை காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

SCROLL FOR NEXT