உலகம்

கூட்டு போர் பயிற்சி: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.இந்த ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

பியாங்காங்:

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். நாளை முதல் 15 நாட்களுக்கு நடக்க உள்ள இந்த தீவிர போர் பயிற்சியில் முத்தரப்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்ப கடலில் நடைபெறவுள்ள இந்த ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும், அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஆன கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த ராணுவ பயிற்சி பொறுப்பற்ற அதிகாரங்களில் கூட்டணியால் நடத்தப்படுகிறது. இது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT