உலகம்

பொதுத்தேர்தலில் படுதோல்வி - டென்மார்க் பிரதமர் ராஜினாமா

நேற்று நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து டென்மார்க் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மாலை மலர்

பொதுத் தேர்தலில் தனது மும்முனைக் கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து , டேனிஷ் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று நடந்த பொதுத்தேர்தலில் அவரது தலைமையிலான ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. தேர்தலில் அவரது கட்சி வெறும் 21.9% வாக்குகளை மட்டுமே பெற்றது. 179 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அக்கட்சி வெறும் 38 இடங்களை மட்டுமே வென்றது.

1903-ஆம் ஆண்டுக்குப் பிறகு அக்கட்சி சந்தித்த மிக மோசமான தோல்வி இதுவாகும். அவரது தலைமையிலான இடதுசாரி கூட்டணி 84 இடங்களையும், வலதுசாரி கட்சிகள் 77 இடங்களையும் வென்றன. பெரும்பான்மைக்குத் தேவையான 90 இடங்களை இரு தரப்பினருமே பெறவில்லை.

இதனால் இரு தரப்பினரும் வெளிவிவகார அமைச்சர் லார்ஸ் லோக் ராஸ்முசென் தலைமையிலான, எந்தப் பக்கமும் சாராத 'மாடரேட்ஸ்' (Moderates Party) கட்சி வென்றுள்ள 14 இடங்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் எந்தக் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியப் பொறுப்பு இப்போது லார்ஸ் லோக் ராஸ்முசென் கையில் உள்ளது.

இருந்தபோதிலும், சமூக ஜனநாயகக் கட்சி 21.9 சதவீத ஆதரவுடன் டென்மார்க்கின் மிகப்பெரிய கட்சியாகத் தொடர்கிறது. இதன் மூலம், கூட்டணிக் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஃபிரடெரிக்சனே மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.