உலகம்

வரி என்ற பெயரில் வசூலித்த 130 பில்லியன் டாலரை வட்டியோடு Refund செய்ய டிரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு, அதிபருக்கு இல்லை3 லட்சம் இறக்குமதியாளர்கள் மற்றும் வணிகர்கள் பயனடைவார்கள்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10% முதல் 18% வரை வரி விதித்தார்.

அமெரிக்காவின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தின் (IEEPA) கீழ் டிரம்ப் இந்த வரியை விதித்திருந்தார்.

ஆனால் கடந்த பிப்ரவரி 20 அன்று, அமெரிக்க உச்சநீதிமன்றம் இந்த வரி விதிப்பு அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அறிவித்தது.

வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு, அதிபருக்கு இல்லை என்று நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

இந்த சூழலில் ஏற்கனவே வரி என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட சுமார் 130 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 லட்சம் கோடி) தொகையை இறக்குமதியாளர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என மன்ஹாட்டன் நகரில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம் டிரம்ப் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வாசித்த நீதிபதி ரிச்சர்ட் ஈடன், அசல் தொகையுடன் மட்டுமல்லாமல், வரி வசூலிக்கப்பட்ட நாள் முதல் கணக்கிட்டு வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பால் அமெரிக்காவில் உள்ள சுமார் 3 லட்சம் இறக்குமதியாளர்கள் மற்றும் வணிகர்கள் பயனடைவார்கள்.

இதற்கிடையில், பிப்ரவரி 24 முதல் 'பிரிவு 122' என்ற மற்றொரு சட்டத்தைப் பயன்படுத்தி தற்காலிகமாக 10% வரியை உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது டிரம்ப் அரசு வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

SCROLL FOR NEXT