அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் தனது 3 பெண் உதவியாளர்களுக்கு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாகப் பெருந்தொகையை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது
வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்துள்ள ஆண்டு சொத்து விவர அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
வெள்ளை மாளிகையின் சிறப்பு மற்றும் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றும் நட்டாலி ஹார்ப், ஊடக ஆலோசகர் மார்கோ மார்ட்டின் மற்றும் ஓவல் அலுவலக துணை இயக்குனர் சேம்பர் லெய்ன் ஹாரிஸ் ஆகிய மூவருக்கும் இந்திய மதிப்பில் தலா ரூ.45 லட்சத்தை டிரம்ப் ரொக்கமாக வழங்கியுள்ளார்
வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி இவர்கள் மூவரும் ஆண்டுக்கு தலா ரூ.1.35 கோடி சம்பளமாக பெற்று வருகின்றனர். ரூ.45 லட்சம் பரிசுத்தொகை அவர்களின் ஆண்டுச் சம்பளத்தில் சுமார் 30 சதவீதத்திற்கு சமமாகும்.
அமெரிக்கக் கூட்டாட்சி சட்டத்தின்படி, அரசு ஊழியர்கள் அரசு வழங்கும் சம்பளத்தை தவிர்த்து பிற வழிகளில் தனியாகப் பண பலன்களை பெறத் தடை உள்ளது.
முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தில் பணியாற்றிய சட்ட ஆலோசகர் ரிச்சர்ட் பெயிண்டர், அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு பெரிய தொகையைப் பரிசாக வழங்குவது விதிமீறலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இது தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட பரிசு என்பதால் நேரடியாகச் சட்ட மீறல் என்று சொல்ல முடியாது என்றும், ஆனால் அரசு ஊழியர்கள் இவ்வளவு பெரிய தொகையை பரிசாகப் பெறுவது அசாதாரணமானது என்றும் பிற சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பரிசுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
டிரம்ப் தொழில் அதிபராக இருந்த காலத்திலிருந்தே, தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் காலத்தில் சொந்தப் பணத்திலிருந்து பரிசுகளை வழங்குவது அவரது வழக்கமான ஒன்றாகும்.
இந்தப் பரிசுகள் முழுமையாகவும் அவரது சொந்த நிதியிலிருந்தே வழங்கப்பட்டுள்ளன. அரசுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.