உலகம்

Iran War Updates| நரகத்தின் கதவுகள் திறக்கப்படும்: டிரம்பின் 48 மணி நேர இறுதி எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி..!

காலக்கெடு நிறைவடைய இன்னும் 48 மணி நேரம்தான் உள்ளது என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், ஈரான் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையிலான போர் எப்போது முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், எரிபொருள் தட்டுப்பாடு அச்சுறுத்தல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இதற்கான ஈரானுக்கு 10 நாள் காலக்கெடு விதிக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், ஈரான் அதை கண்டுகொள்ளாமல் பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையே இந்திய நேரப்படி நேற்றிரவு ஈரானுக்கு எதிராக டிரம்ப், இறுதி எச்சரிக்கை வெளியிட்டார். அதில் "ஈரான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிட நான் பத்து நாட்கள் அவகாசம் அளித்ததை நினைவில் கொள்கிறீர்களா? நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் 48 மணி நேரமே உள்ளது. அதன் பிறகு (Hell will reign)) Glory be to GOD!" குறிப்பிட்டிருந்தார். அதாவது ஈரான் மீதான தாக்குதலை அதிகரித்து அந்நாட்டை மூழ்கடிப்போம் என மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ஈரானின் கூட்டு ராணுவ கமாண்ட் தளபதி அலி அப்துல்லாஹி அலியாபாதி, "ஈரான் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், உங்களுக்கு நரகத்திற்கான கதவுகள் திறக்கப்படும். மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேலின் கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் ஒரு ராணுவ வீரர் மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர் உயிருடன் பிடிபட்டால் ஒருவேளை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அவர் முக்கிய காரணமாக அமையலாம்.

கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தின. அதற்கு ஈரான் பதலடியாக மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

தற்போது ஈரானில் உள்ள முக்கியமான கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றன.